புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

பாடலைக் கண்டீர்கள்!

இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?

இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார்.