கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

இனி என்ன?

‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?

அதையும் பார்த்து விடுவோம்!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!

“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!

தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”

நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?

‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?

உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’

ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!

பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!

பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’

மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.

அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!

அடுத்து,

தர்மம்! என்ன செய்யும்?

தலை காக்கும் – எப்படி?

இதோ…….பார்ப்போமே!

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

இந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.