1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர், ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போலக் கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும் என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

அதுதான் ‘அண்ணாயிஸம்’!

தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித் தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார். அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்’ என்றார்.

திடீரென்று தொலைபேசியில் அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர், ”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். புரட்சித் தலைவர்.

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

”அண்ணா தி.மு.க வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன? என்று கேட்டனர்.

அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.

எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸ விளக்கத்தைச் சிலர் பாராட்டினார்கள்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழ்நாட்டு மக்களோ, எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸத்தின் அடிப்படை என்று தங்களுக்குத் தாங்களே ஒரு விளக்கத்தை கூறிக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டனர்.

சிலை வைத்துச் சிறப்பித்தார்.!

அதே 1973 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் இன்னும் இரு முக்கியமான காரியங்களைச் செய்தார். திராவிட இயக்கச் சிற்பிகளான அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் அண்ணா சாலையில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வண்ணம் இரு சிலைகளைச் செய்தமைத்தார்.

முதலில் பேரறிஞர் அண்ணாவுக்கு, அண்ணாசாலையும் வாலாஜா சாலையும் சந்திக்கும், அரசினர் தோட்ட சந்திப்பு முனையில், ஒரு விரலைக் காட்டி நிற்கும் ஆளுயர அண்ணா சிலையை நிறுவினார். அந்தச் சிலையைப் புரட்சித் தலைவர் தம் சொந்தச் செலவிலேயே நிறுவினார். கலவி மேதை டாக்டர் ஏ.இராமசாமி முதலியாரைக் கொண்டு அந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைக்கச் செய்தார்.

பெரியாருக்குச் சிலை

அதே 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று அதே அண்ணா சாலையில், இந்து நாளேடு அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைச் சந்திப்பில், தந்தை பெரியாருக்கும் பிரும்மாண்டமான சிலை ஒன்றை நிறுவித் திறந்து வைத்தார். இதற்கான அனுமதியைத் தந்தை பெரியாரிடமே பெற்றார், புரட்சித் தலைவர்!